நடுவானில் முட்டிமோதிய விமானங்கள்! 2 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம்
நடுவானில் முட்டிமோதிய விமானங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம் (18) உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கலிபோர்னியாவின் உள்ளூர் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்க முற்பட்டவேளை வாட்சன்வில்லி நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டு கோபுரம் இல்லை
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேவேளை, குறித்த விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் ஒரு கட்டுப்பாட்டு கோபுரம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் நான்கு ஓடுபாதைகள் உள்ளதுடன், 300 இற்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு 55,000 இற்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கும் இந்த விமான நிலையம் பொழுதுபோக்கு, விவசாயம் மற்றும் வணிக விமானங்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
சிதைந்து கிடந்த விமானம்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் காணொளிகள் விமான நிலையத்தின் புல்வெளியில் ஒரு சிறிய விமானம் சிதைந்து கிடப்பதை காட்டுகின்றன.
விமானங்கள் மோதியபோது தரையில் இருந்து சுமார் 61 மீட்டர் உயரத்தில் இருந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி
சீனாவை உலுக்கிய விமான விபத்து!! திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது