வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன் உயிருடன் இருப்பது முக்கியம்! கிடைப்பதை போட்டுக்கொள்ளுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் முடிந்தவரை இரண்டு முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு தாம் நாட்டு மக்களை கேட்டுக் கொள்வதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் விசேட மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அதேவேளை வீடுகளிலிருந்து வெளியே செல்லும்போது 'பேஸ் ஷீல்ட்' முக பாதுகாப்பு உபகரணத்தை உபயோகிப்பது மிக முக்கியமானது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அருகிலுள்ள தடுப்பூசி நிலையத்திற்குச் சென்று என்ன ரகம், என்ன பெயர் என்று பாராது கிடைக்கின்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலர் வெளிநாடுகளுக்குப் போவதற்கு ஆயத்தமாக பல்வேறு தடுப்பூசிகளை தேடித் திரிவதாக குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் உயிருடன் இருப்பது முக்கியம் என்பதையும் தடுப்பூசியை தெரிவு செய்து போட்டுக் கொள்வது கடமையாகும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தத்தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தாமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், மற்றவர் தீர்மானிக்கும் வரை காத்திருக்காது பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றுங்கள் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.