மகிந்தவே தொடர்ந்தும் தலைவர்! மீண்டும் கோட்டாபயவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் முக்கிய தகவல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்சவே தொடர்ந்தும் செயற்படுவார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கோட்டாபயவை வரவேற்க தயார்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன வரவேற்பு தெரிவிக்கும்.
கோட்டாபய ராஜபக்ச ஓர் இலங்கை பிரஜை எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர அவருக்கு முழு உரிமை உண்டு.
முன்னாள் அதிபர் என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
எமது ஆதரவு இல்லாமல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆட்சி செய்ய முடியாது
எதிர்க்காலத்தில் நாட்டில் சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமையுமானால் அதில், எமது கட்சி நிச்சயமாக பங்காளியாக செயற்படும்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தான் இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது. எமது கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆட்சி செய்ய முடியாது.
இதேவேளை, எதிர்க்காலத்தில் எவ்வாறான அரசாங்கம் அமையப்போகிறது என்பதை பார்த்து, நாம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்" எனக் குறிப்பிட்டார்.