கல்கிஸ்ஸை தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு இடமாற்றம்
புதிய இணைப்பு
கல்கிஸ்ஸை காவல்துறை தலைமையக காவல்துறை பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் பொதுப் பணிகளுக்காக மருத்துவ சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வழக்கறிஞர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, நடைபெற்று வரும் முதற்கட்ட விசாரணைகள் தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் : காவல்துறை வெளியிட்ட அறிக்கை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி காவல்துறைமா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டமை குறித்து காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக அந்த சட்டத்தரணிக்கும் காவல்துறைமா அதிபருக்கும் இடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி அந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி மூலம் காவல்துறைமா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக காட்டியுள்ளது.
காவல்துறைமா அதிபரை அழைத்து
இதன் மூலம், குறித்த சட்டத்தரணி காவல்துறைமா அதிபரை நேரடியாக அழைத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒரு தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “2025.10.10 ஆம் திகதி காலை கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் கடமையிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை, சட்டத்தரணி ஒருவர் ஏதோ ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி, பலத்தை பயன்படுத்திய சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் வழக்குப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்த சிலரின் வாக்குமூலங்களும் பதிவுசெய்யப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை தலைமையக காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி அந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி மூலம் காவல்துறைமா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக காட்டும் வகையில், அவர் "பிரியந்த எனது ஜூனியர் பேட்ச்...", "பிரியந்தவிடம் சொல்லுங்கள் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள்...", "பிரியந்தவிடம் என்னை அழைக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் பிரியந்தவின் நம்பரைத் தாருங்கள்..." என்று கூறுவது அந்த காணொளி காட்சிகளில் காணப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன் மூலம், இந்த சட்டத்தரணி காவல்துறைமா அதிபரை நேரடியாக அழைத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒரு தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக அந்த சட்டத்தரணிக்கும் காவல்துறைமா அதிபருக்கும் இடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மா அதிபர் அறிந்ததன் பின்னர், கல்கிஸ்ஸை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கும், கல்கிஸ்ஸை தலைமையக காவல்துறை பரிசோதகருக்கும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ள போதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு காவல்துறைமா அதிபர் உத்தரவு பிறப்பிக்கவில்லை.
எனினும், காவல்துறைமா அதிபர் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் போதே, சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தினால் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பை வெளிப்படுத்திய சட்டத்தரணிகள்
அத்துடன் இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகளும் ஒருவித எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில், கல்கிஸ்ஸை நீதவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் காவல்துறை விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக, காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினாலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (13) மீண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
