மட்டக்களப்பில் நள்ளிரவில் பதற்றம்...! இளைஞர்களை தலைக்கவசத்தால் தாக்கிய காவல்துறையினர்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பத்து மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது.
வீதிச்சோதனை
பிரதான வீதியில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடத்திய நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து காவல்துறையினர் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், காவல்துறையினர் இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கியதுடன், அவர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் வாக்குவாதம்
இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனனர்.
இதன்பின்பு, அப்பகுதிக்கு காரிலும் காவல்துறை வாகனத்திலும் மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ள போதும் தலைக்கவசத்தினால் தாக்கியதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடத்தியது காவல்துறையினரின் அராஜகமான செயற்பாடு என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



