வைரலாகும் சர்ச்சைக்குரிய கடிதம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இலங்கை காவல்துறையினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த கடிதம் திட்டமிடப்பட்ட முறையில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உருவாக்கப்பட்ட கடிதம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
போலி கையொப்பம்
“கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரையும், போலியாக தயாரிக்கப்பட்ட கையொப்பத்தையும் உள்ளடக்கி, ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எவையும் சட்டப்பூர்வ அடிப்படையற்றவை எனவும், ஒன்றுக்கொன்று பொருந்தாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, இலங்கை தேசிய இலட்சினை, இலங்கை உயர் நீதிமன்ற இலட்சினை மற்றும் இலங்கை காவல்துறை அதிகாரப்பூர்வ இலட்சினைக்கு ஒத்தவாறு இலட்சினைகள் அச்சிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
தவறாக திரிக்கப்பட்ட தகவல்கள்
இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட “Cyber Crime Headquarters Colombo, Sri Lanka” என்ற பெயரில் இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகள் அல்லது விடயங்கள் இலங்கை காவல்துறையினரால் வெளியிடப்படாத, தவறான மற்றும் திரிக்கப்பட்ட தகவல்கள் எனவும் இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலிக் கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
