அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் போருக்கான இராஜதந்திரத் தீர்வு காணுவது கடினம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கத்தாரின் ஹமத் பின் கலீஃபா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக்கான சிரேஷ்ட பேராசிரியர் சுல்தான் பரகாத் (Sultan Barakat) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், லாரிஜானி கொல்லப்பட்டது ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டால் இந்தப் போருக்கான இராஜதந்திரத் தீர்வை எட்டுவது மிகவும் கடினமானதாகவும் நீண்ட காலத் தாமதமாகவும் மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

லாரிஜானியின் மரணம் ஈரானிய ஆட்சிக்குள் இருக்கும் தீவிரப்போக்குடையவர்களின் கரங்களை வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இராஜதந்திரத் தீர்வுகள் தற்போதைய சூழலில் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரிய இழப்பு
அரசியலில் இருவேறு துருவங்களாக இருக்கும் தரப்பினருடனும் பேசக்கூடிய திறன் லாரிஜானிக்கு இருந்தது எனவும் இது ஈரானில் அதிகார சமநிலையைப் பேணுவதற்கு அவரை மிகவும் முக்கியமானவராக மாற்றியது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், லாரிஜானி உயர்கல்வி கற்றவர் எனவும் மேற்கத்திய நாடுகளிடமும் ஈரானின் பழமைவாதிகளிடமும் அதேபோன்று சீர்திருத்தவாதிகளிடமும் எப்படிப் பேசுவது என்பதை அவர் அறிந்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் இறந்தது உறுதியானால் இராணுவ மோதலுக்கு மாற்றாக வேறு தீர்வுகளைக் கோருபவர்களுக்கு அது ஒரு பெரிய இழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |