திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை
வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான திருவிழா இன்று (08) சனிக்கிழமை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
இத்திருவிழாவைச் சிறப்பிக்கும் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு ஆலயத்தின் வெளிவீதி முன்றலில் நடைபெற்றது.
இன்று மாலை 4.30 மணியளவில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முருகன் வடிவில் மாணவர்களின் நடனம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல பண்பாட்டு நிகழ்வுகளுடன் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் கலாசார ஊர்வலம் ஆரம்பமானது.
மாணவர்களின் கால் சலங்கை ஓசை
இவ்வூர்வலம் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி வழியாக பிரதான வீதியினூடாக ஆலயத்தைச் சென்றடைந்தது.

ஊர்வலத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வில், கடல் அலைகளின் ஓசையை விடவும் மாணவர்களின் கால் சலங்கை ஓசை ஓங்கி ஒலித்து, அப்பகுதியையே தமிழ் கலாசாரப் பெருமிதத்தின் அடையாளமாக மாற்றியதை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணர்வுபூர்வமாகக் கண்டுகளித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க இவ்வாலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
18 நாட்கள் தொடர்ச்சியாக சிறப்பு யாகங்கள், கிரியைகள் மற்றும் கொடித்தம்ப பூஜைகளுடன் நடைபெறும் இவ்வுற்சவம், எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை காலை வங்கக் கடலில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடனும், மறுநாள் (13) நடைபெறும் பூங்காவனத் திருவிழா மற்றும் வைரவர் பூஜையுடனும் நிறைவுபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













