நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை
அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரான் போரில் உதவாததை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார்.
அத்தோடு, நேட்டோ (NATO) அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், நேட்டோ உறுப்பினர் அங்கத்துவம் என்பது நிச்சயமாக நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதவிக் கோரிக்கை
அத்தோடு, தனது உதவிக் கோரிக்கைகளை நிராகரித்த அமெரிக்க நட்பு நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது அமெரிக்கா உதவ வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் உக்ரைன் போரையும் ஈரான் போரையும் ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை எனவும் இது நேட்டோ அமைப்பிற்கு மிகவும் மோசமான ஒரு விடயம் என்று நான் நினைக்கிறேன் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கும் அமெரிக்காவின் இலக்கிற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஆதரவளித்தாலும் போரில் ஈடுபட அவர்கள் தயக்கம் காட்டுவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமானவர்கள்
மேலும், “ஈரான் அணு ஆயுதம் பெறுவதை யாரும் விரும்பவில்லை ஏனென்றால் அந்த மக்கள் பைத்தியக்காரத்தனமானவர்கள்.
அவர்கள் முற்றிலும் பைத்தியக்காரத்தனமானவர்கள், கொடூரமானவர்கள் மற்றும் வன்முறைமிக்கவர்கள்.

இதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் உதவ விரும்பவில்லை" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இதனைக் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், “அமெரிக்காவாகிய நாங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும் ஏனென்றால் இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக நாங்கள் கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நேட்டோவிற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என அவரிடம் கேட்கப்பட்ட போது, “இல்லை, நீங்கள் செய்வது ஒரு சிறந்த காரியம் ஆனால் நாங்கள் உதவப்போவதில்லை என அவர்கள் கூறுவது ஒரு கூட்டாண்மைக்கு அழகல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்” என அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |