நீதிமன்ற சான்றுப்பொருளை மாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் கைது!
கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு ஒன்றின்போது சான்றுப்பொருளினை மாற்றியமைத்த குற்றச்சாட்டில் முள்ளியவளை காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் நேற்று (23) கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் (24) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் அவரை எதிர்வரும் 02.07.2026 அன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முள்ளியவளை காவல் நிலையம்
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளியவளை காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தியோகத்தராக கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்ற சான்றுப்பொருளினை மாற்றியமைத்துள்ளார்.

அதாவது, மணல் கடத்தல் வழக்கு ஒன்றின் போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு உழவு இயந்திரத்தினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம்
நீதிமன்றத்தில் சான்றுப்பொருளை மாற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (23.06.2026) கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்திய போது எதிர்வரும் 02.07.2026 அன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |