கைத்துப்பாக்கி வெடித்ததில் காவல்துறை உத்தியோகத்தர் காயம்: தமிழர் பகுதியில் சம்பவம்
அம்பாறையில்(Ampara) கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம், காரைதீவு காவல்துறை நிலையத்தில் நேற்று(17.03.2025) இரவு இடம்பெற்றது.
காரைதீவு காவல் நிலையத்தில் கடமையாற்றும் 39 வயதுடைய நல்லதம்பி நித்தியானந்தன் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
கைத்துப்பாக்கி வெடித்த சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை பெற்றுக்கொள்வதற்கு ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரிடம் மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றினை பெற சென்றுள்ளார்.
இதன்போது, ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் குறித்த கைத்துப்பாக்கியை பரிசீலனை செய்வதற்காக மேசையில் வைத்த வேளை திடீரென கைத்துப்பாக்கி தவறி வெடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காரைதீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
