பெரும் பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை தேடும் காவல்துறையினர்
தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து சுமார் 9.9 மில்லியன் ரூபாயினை மோசடி செய்து ஏமாற்றிய தம்பதியினரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
"டி'மார்க் சொல்யூஷன் (பிரைவேட்) லிமிடெட்"(D marc Solution (Pvt) Ltd) என்ற ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான தம்பதியினரையே குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தேடி வருகின்றனர்.
பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைக்கும் பணிகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து சுமார் 99,43,108.03 ரூபாயினை இந்த தம்பதியினர் பெற்றுள்ளனர்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது
ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி புனரமைப்பு வேலைகள் நடைபெறவில்லை.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட புகாரினை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணையின் போது, 31/7, பெபிலியன வீதி, நாடிமலை, தெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள D'marc Solution (Pvt) Ltd பெயரில் இயங்கிவரும் நிறுவனத்தின் உரிமையாளர்களாக குறித்த தம்பதியினர் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
பொதுமக்களிடம் உதவி
அதன்படி, இலக்கம் 39, கார்டினல் கோரே மாவத்தை, ஹெந்தலை, வத்தளையில் வசிக்கும் 31 வயதான விக்னேஷ்வரன் கணேசன் மற்றும் 04/4, ஹிரிபுர குறுக்கு வீதி, தங்கேதர, காலி என்ற முகவரியில் வசிக்கும் நிரோஷினி ராஜரத்தினம் என்ற தம்பதியினரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த இருவரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இவர்களைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியினை நாடி நிற்கின்றார்கள்.
இவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்கப்பெற்றால் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் 071-8137373 அல்லது 011-2852556 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறியத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)