தையிட்டி - பவானி வீதி தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்
தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் பிரதேச சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் (15) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கை எந்தளவில் தற்போது காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

அதன் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும், நீதிமன்றில் குறித்த வீதியை விடுவிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் ஏன் காலதாமதம் என மீண்டும் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், “நீதிமன்ற கட்டளையை நடைமுறைபப்டுத்த காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பலாலி காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை எனில், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினரை ஒன்றிணைத்து கூட்டம் ஒன்றினை நடாத்தி, எவ்வாறு வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என தீர்மானிப்போம்“ என தெரிவித்தார்
இந்தநிலையில் காவல்துறையினரை அழைத்து கூட்டம் கூடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்குமாறு நீதிமன்றமும் கட்டளையிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். இங்கே வீதியினை விடுவிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க கூடாது என வழக்கு தொடர்ந்ததே பலாலி காவல்துறையினர் தான். அதனால், அவர்கள் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த பின்னடிக்கலாம்.

ஆகவே வீதியினை விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய கட்டளையை பிரதேச சபை நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள் என கோரினார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |