சிறிலங்காவில் அமெரிக்க புலனாய்வு மையம் - சீன, இந்திய முதலீட்டாளர்களுக்கு சிக்கல்!
இரகசிய விஜயத்தின் ஒரு அங்கமாக அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் பெப்ரவரி 14 ஆம் திகதி இலங்கை வந்திருந்தார்.
இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் அரசாங்கமும், அமெரிக்காவும் மௌனத்தைக் கடைப்பிடிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகள்
தொடர்ந்து அவர்,
"அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் உடன் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நான்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் முக்கியமாக புலனாய்வு பகுப்பாய்வு மையம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கும், அமெரிக்காவுடன் உளவுத்துறை பகிர்வு நோக்கமும் அடங்குகிறது.
குறித்த விடயம், முதன் முதலில் அதிபர் ரணில் நல்லாட்சி அரசில் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது.
அடுத்த முன்மொழிவாக, அமெரிக்கா தமது அணுகலின் கீழ் இலங்கைக்கு பயோமெட்ரிக் குடிவரவு கட்டுப்பாட்டு முறையை வழங்குவதாகும்.
இந்த நடவடிக்கைள் காரணமாக சீன மற்றும் இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் வர்த்தகம் மேற்கொள்வதில் சிக்கல் நிலையை தோற்றுவிக்கும்.
அடுத்த முன்மொழிவாக, நீர்மூழ்கிக் கப்பல் தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் தரவுகளுக்கான விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இது இலங்கையில் ஏதாவது பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தால் முன்கூட்டியே புலனாய்வு தகவல்களை அமெரிக்கா வழங்க தயாராக உள்ளதை காட்டுகிறது.
இறுதியாக, இரு நாடுகளுக்குமிடையிலான சோபா என்ற படைகள் பற்றிய விடயமாகும்.
குறித்த விடயங்கள் நடைமுறையாகுமாயின் பனாமாவின் நிலை இலங்கைக்கும் ஏற்படும் என உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
