ரணிலுக்கு ஆதரவாக தோன்றும் புதிய கட்சி - பொங்கி எழும் மொட்டு தரப்பினர்
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிப்பு விடுத்துள்ளது.
இந்த எச்சரிப்புக்கு மத்தியிலும் தமது கூட்டணி ஆரம்பிக்கப்படுமென நிமல் லன்சா தெரிவித்ததாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளது.
நாமல் அதிருப்தி

இந்த கூட்டணியில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர், சுதந்திர கட்சியினர் மற்றும் மேலும் சில சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளனர்.
நிமல் லன்சா தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
அத்துடன், தமது புதிய கட்சி தொடர்பில் நிமல் லான்சா, அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியல் கூட்டணி மற்றும் நிமல் லன்சாவின் நடவடிக்கை குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
புதிய கூட்டணி

இதனை தொடர்ந்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றுக்கு தெரிவான நிமல் லன்சா, புதியதொரு கூட்டணியை அமைப்பதை எதிர்த்து கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் பசில் ராஜபக்ச, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை நிமல் லன்சா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது