உள்ளூரில் உள்ளவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைத்தால் அதிகாரப்பகிர்வு நிச்சயம் : சுட்டிக்காட்டும் சுமந்திரன்
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை உள்ளூரில் உள்ளவர்களிடம் ஒப்படைத்தால் மாத்திரமே பல தசாப்தங்களாக கோரிவரும் அதிகார பகிர்வினை கைகளில் பெறமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) - புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்பிடியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. என்பதை நாட்டுக்கும் உலகுக்கும் சொல்லுவதற்கு இந்த தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம்.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது.
எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள்.
நாடாளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஸ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சிசெய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது.
எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும். மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்துவந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாண்மை பலத்தை மக்கள் கொடுத்தனர்.
சாணக்கியனின் தனி முயற்சி
அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது, துரதிஸ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆனால் எப்படியான முடிவு நாடாளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக்கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறதுதான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்கட்சி. அதில் மாற்றம் இல்லை.
தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ்மக்களின் ஆணையும் எங்களுக்குத்தான் இருக்கிறது ஆகவே தமிழ்த்தேசிய பிரச்சினையை தாங்கள் பார்த்துகொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப்பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள்,வடகிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள்.
அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம்தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை.அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
