மண்கும்பானில் உள்ள குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வேலணை - மண்கும்பானில் ஏற்கனவே இருக்கின்ற, சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்து தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமினாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் நேற்றைய (26) அமர்வின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியாது
ஏனையவையும் கடுமையான பாதிப்புக்களுடனேயே இருக்கின்றன. இவற்றை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படும் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணமுடியும்.

அதுமட்டுமல்லாது இது விவசாய தேவைகளுக்கும் சாதகமாக அமையும். வேலணைக்கே நன்னீர் கொடுக்கும் நன்னீர் வளம் மிக்க எமது மண்கும்பானில் மழை நீரை அதிகளவில் சேகரித்தால் மேலும் நன்னீர் இருப்பை மேம்படுத்திக் கொள்ளலாம்.
அந்த குளங்களுக்கு நிதியை செலவு செய்வது வீண் விரயமற்ற ஆரோக்கியமான ஒரு விடயம். இருக்கின்ற நீர் நிலைகளை கைவிட்டு புதியவற்றை உருவாக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேநேரம் சாட்டிப் பகுதியின் பாதுகாப்பு அவசியமானது. அதற்கான முயற்சி எடுக்கப்படுமானால் அதை வரவேற்போம்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |