போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் (Pope Francis) சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூட்டங்கள் ரத்து
அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, உதவியாளர்களிடம் உரைகளை படிக்குமாறு கூறி தொடர் கூட்டங்களை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ்சின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததன் காரணமாக தற்போது ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அடுத்த மூன்று நாட்களுக்கு அவர் தனது கூட்டங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை
இதேவேளை, இதற்கு முன்னதாகவும் இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப்பாண்டவர் இவர் என்பதுடன், 2013 இல் பிரான்சிஸ் கான்க்ளேவ் எனப்படும் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)