உக்ரைனிலிருந்து கொண்டுவரப்பட்ட தேசிய கொடியை முத்தமிட்ட பாப்பரசர்(photo)
உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற கொலைகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனின் தேசியக் கொடியை அவர் முத்தமிட்டுள்ளார்.
"உக்ரைனில் நடைபெறும் போர் தொடர்பான சமீபத்திய செய்திகள் நிம்மதியையும் நம்பிக்கையும் அளிப்பதற்கு பதிலாக, புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகள் உள்ளிட்ட புதிய கொடுமைகளை ஏற்படுத்தியுள்ளது," என அவர் தெரிவித்ததாக, ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
"பொதுமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் அதிகரித்துள்ளன" என அவர் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, கடந்த செவ்வாய்க்கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கொடுமையான குற்றங்களை ரஷ்யப் படைகளை இழைத்துவருவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் தனக்கு புச்சாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறிய உக்ரைனின் தேசியக் கொடியை பார்வையாளர்களுக்காக விரித்துக்காட்டினார். அப்போது, பார்வையாளர்கள் கைதட்டினர்.
இதையடுத்து, உக்ரைனிலிருந்து செவ்வாய்க்கிழமை அங்கு அகதிகளாக வந்திருந்த குழந்தைகளை தன்னிடம் வருமாறு அழைத்தார். "பாதுகாப்பான நிலத்தை அடைவதற்காக இக்குழந்தைகள் உக்ரைனிலிருந்து இங்கு வந்துள்ளனர். நாம் அவர்களை மறக்கக்கூடாது. உக்ரைன் மக்களை மறக்கக்கூடாது" என தெரிவித்தார். பின்னர் அக்குழந்தைகளுக்கு சொக்லேட் ஈஸ்டர் முட்டைகளை அன்பளிப்பாக வழங்கினார்.

