கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி!
மீகஸ்ஆரே கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகள், கணேமுல்ல சஞ்ஜீவ ஆகியோரின் கொலைகள் Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாட்டின் வெளிப்பாடுகள் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளின் கொலையில் ஜே.சி.பி சமன் அல்லது பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தில் பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் வலுவடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வது நீண்ட நாள் திட்டம் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான சந்தர்ப்பம் வரும் வரை கெஹெல்பத்தர பத்மே காத்திருந்தார்.
கார் ஒன்றை ஜே.சி.பி சமனுக்கு வாடகைக்கு வழங்கி அதில் பொருத்தப்பட்டிருந்த GPS தொடர்பிலேயே முறுகல் ஏற்பட்டதாக கஜ்ஜாவின் மகன் அண்மையில் நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவ்வாண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் கொலை செய்யப்படுகிறார்.
அதற்கு முன்தினம் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு தனது இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார்.
துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம்
குறித்த இரு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் தலையோங்கி காணப்பட்ட போது நடத்தப்பட்ட நிலையில், கஜ்ஜாவின் கொலை சாதாரண கொலைச் சம்பவமாகவும், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது.
இவ்வாறான பின்னணியில், கஜ்ஜா ஒரு யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தான் கொலை செய்யப்பட்டால் அதற்கு ராஜபக்சர்களே பொறுப்பாளிகள் எனவும் தெரிவித்திருந்தார்.
கஜ்ஜா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணேமுல்ல சஞ்சீவ கொலை இடம்பெற்றதால் கஜ்ஜா, தனது மரணத்திற்கு யார் காரணம் என தெரிவித்த கருத்து வலுவிழக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.
எந்தவொரு ஊடகத்திலும் அது பேசு பொருளாக்கப்படவில்லை. இங்கு தான் இந்த Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
Dead Cat Theory
Dead Cat Theory (டெட் கேட் தியரி) என்பது அரசியல் மற்றும் ஊடகங்களில் சாதகமற்ற செய்திகள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து திசை திருப்பப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும்.
இதனை, அரசியல்வாதியொருவர் ஒரு வாதத்தில் தோல்வியடையும் போது அல்லது எதிர்மறையான ஆய்வுக்கு உள்ளாகும் போது, அதிர்ச்சியூட்டும் அல்லது பொருத்தமற்ற தகவலை வௌியிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை அசல் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பக்கூடிய செயற்பாடு என அவுஸ்திரேலிய அரசியல் மூலோபாய நிபுணர் லிண்டன் கிராஸ்பி விளக்கியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனியவில் இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். அதற்கு அடுத்த நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி காலை கணேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி காலை, கஜ்ஜாவின் கொலை தொடர்பில் அவர் முன்கூட்டியே ஊடகங்களில் கூறிய விடயங்கள் ஆழமாக அலசப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், அந்த கொலையும் அதற்கான பிரதான காரணங்கள் மறைக்கப்பட்டு கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.
தற்போது இவ்விரு கொலைகள் தொடர்பிலும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றின் அடிப்படையில், இவ்விரு கொலைகளுக்கும் உதவியவர் சம்பத் மனம்பேரி. அவர் மொட்டுக் கட்சியில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார்.
ஆக, இந்த விடயங்களில் தெற்கின் பிரதானமான ஒரு கட்சி Dead Cat Theory யின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதை இவ்விடயங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
