பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளாக!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி இன்று 2 ஆவது நாள் தாழங்குடா மட்டக்களப்பு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் நேற்றைய தினம் பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் என்பன உள்ளடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் தொடர்கிறது.
தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பல உணர்வாளர்கள் தாமாகவே போராட்டத்தில் இணைந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.




