மின்வெட்டு நடைமுறை தொடர்பில் புதிய அறிவித்தல்
பெப்ரவரி 04, 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை இன்று அனுமதி கோரியுள்ளது.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, மின்வெட்டை நடைமுறைப்படுத்தாமலிருக்க மின்சார சபை நேற்று உயர் நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
எனினும், அந்த வாக்குறுதியை மீளப் பெறுவதாக மின்சார சபையின் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த உறுதிமொழியை திரும்பப் பெறுவதாக காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், மனு மீதான இன்றைய பரிசீலனை நிறைவடைந்த பின்னர், ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதிவாதிகள் தரப்பினரால் உயர் நீதிமன்றத்திற்கு நேற்று வழங்கப்பட்ட உறுதிமொழியை முடிவுறுத்துவதாக இருந்தால், உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றமையை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரான மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்தக் கோரிக்கையை நிராகரித்து, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 07 ஆம் திகதி பிற்பகல் 1.30 வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
