விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தென்னிலங்கையில் புகழாரம்
எதிர்காலத்தில் இலங்கை மிகப் பெரிய போர்க் களமாக மாறும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டேன் பியசாத்(Den Piyasath) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறிய அவர், தற்போது வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்க மாட்டாது என டேன் பியசாத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''உண்மையில் வடக்கில் பிரபாகரன் இருந்திருந்தால், திருகோணமைலை துறைமுகங்களுக்குரியவை விற்பனை செய்யப்பட்டிருக்க மாட்டாது. சீனா, இலங்கைக்கு வந்து துறைமுக நகரத்தை நிர்மாணித்திருக்காது. இந்தியா துறைமுகங்களை கொள்வனவு செய்யவும் வந்திருக்காது.
நாட்டின் வளங்களை துண்டு துண்டுகளாக விற்பனை செய்கின்றனர். இதனால், நாடு மிகவும் பயங்கரமான நிலைமைக்கு சென்றுள்ளது.
சீனா, இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரகசியங்களை தேட என இந்தியா கூறுகிறது. எதிர்காலத்தில் இலங்கை மிகப் பெரிய போர் களமாக மாறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இவ்வாறு சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டால், எமது நாட்டு மக்களே இழப்பீடுகளை செலுத்த நேரிடும் என அவர் கூறியுள்ளார்.