தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசனை - மலர் மாலைக்கு 97 ஆயிரம் ரூபா
நடைபெறவுள்ள 75வது சுதந்திர தின செலவுகளை குறைத்து அதை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் நேற்று சுதந்திர தின கொண்டாட்ட வேலைத்திட்டங்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைக்கு ஏற்றால்போல் நிதிச்செலவுகளை கையாளுமாறும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அரசியல் அதிகார தரப்புக்கு மாத்திரமல்லாது அதிகாரிகளினதும் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
97 ஆயிரம் ரூபா

மேலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஒதுக்கப்பட்டுள்ள நிதி சம்பந்தமாக மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு இருப்பது தொடர்பாக கவனம் செலுத்தி செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,''சில செலவு மதிப்பீடுகள் குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். டி.எஸ் சேனாநாயக்கவுக்கு மலர் மாலை அணிவிக்க 97 ஆயிரம் ரூபா ஐக்கிய தேசியக்கட்சி செலவு செய்தது.
எப்படி 97 ஆயிரம் ரூபா செலவாகும் என்பது எனக்கு தெரியாது. தேசிய கீதத்தை பாட 18 லட்சம் ரூபா கேட்டுள்ளனர். நாங்கள் கடந்த காலங்களில் போக்குவரத்து செலவு மற்றும் உணவை வழங்கினோம்.
இசை நிகழ்ச்சி

செயலாளர் செலவுகள் பற்றி பார்க்க வேண்டும். நான் ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.கலை, பண்பாட்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதற்கு தேவையான பணத்தை அவர்களே தேடிக்கொள்கின்றனர். நாங்கள் தாமரை தடாகம் அரங்கத்தை மாத்திரம் இலவசமாக வழங்குகிறோம். இப்படி வேலைகளை செய்ய வேண்டும்.75 வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.
இதனை செய்யவில்லை என்றால் நாட்டுக்கு சரியில்லை. சுதந்திர தினத்தை கொண்டாட பணம் இல்லை என்று உலகம் கூறும்.
முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டுமாயின் இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.