இலங்கையின் வரலாற்று தொன்மைகளை குறிவைக்கும் ஜோர்ஜியா..!
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையிலுள்ள புராதன கட்டிடங்களை முதலீட்டு வாய்ப்புகளுக்காக உரிய முறையில் பயன்படுத்துவது மற்றும் ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இன்று (5) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில், குறித்த கலந்துரையாடல் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஜோர்ஜியாவின் இலங்கைப் பிரதிநிதி நினோ மக்விலாட்சே உள்ளிட்ட ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நவீனமயப்படுத்தப்படும்.
அத்தோடு, கொழும்பு கபூர் கட்டிடம் மற்றும் கொழும்பு “எய்ட் கிளப்” கட்டிடம் என பல இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இந்த கட்டிடங்கள் வரலாற்று தொன்மைக்கு சேதம் விளைவிக்காத வகையில் நவீனமயப்படுத்தப்படும்.
இந்நாட்டில் உள்ள பெரும் பழமையான கட்டிடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வருகின்றன.
அவற்றை நவீன மயமாக்கி முதலீடுகளுக்கு உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்ட முடியும்.
கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல தீர்க்கப்பட்டு வருகிறது.
எனவே, எதிர்காலத்தில் இந்த நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைமுறைக்கு
இதன்போது, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த வேலைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தோடு, இத்திட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடிய வேறு இடங்களைத் தேடி அதற்கேற்ற வேலைத் திட்டத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், தற்போது நாடு முழுவதிலும் உள்ள இவ்வாறான இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்று வருவதாகவும், எதிர் காலத்தில் அந்த இடங்களையும் இந்த வேலைத் திட்டத்திற்கு பயன் படுத்த முடியும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி. பிரியசாந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்துகொண்டனர்.
