அநுரவிடமிருந்து ட்ரம்பிற்கு பறந்த கடிதம்
இலங்கைக்கு (sri lanka)விதிக்ப்பட்ட வரிகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(anura kumara dissanayake), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு (donald trump)கடிதம் எழுதியுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த(Anil Jayantha Fernando) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடனான சந்திப்பு இன்று (08)இரவு 8 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பரஸ்பர வரிகள் குறித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் அறிவித்தார்.
நாங்கள் பீதியடையவில்லை
“இந்த விஷயங்களைத் தணிப்பதற்கான சாத்தியமான வழிகள், நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் இந்த வரிகளைக் குறைப்பதற்கான ஒத்துழைப்புக்கான கோரிக்கை ஆகியவற்றை ஜனாதிபதி தனது கடிதத்தில் எடுத்துரைத்தார்,” என்று அவர் கூறினார்.
அந்தக் கடிதத்திற்கான ஒப்புதல் வெள்ளை மாளிகையிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். “தேவைக்கேற்ப நாங்கள் முன்னெச்சரிக்கையாகவும் எதிர்வினையாற்றவும் செயல்பட்டோம். இருப்பினும், நாங்கள் பீதியடையவில்லை, உணர்ச்சிகளால் இயக்கப்படவில்லை.
சாத்தியமான அனைத்து அபாயங்களும் விளைவுகளும் மதிப்பிடப்பட்டு அதற்கேற்ப பரிசீலிக்கப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் தொடர்ச்சியான உரையாடல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இலங்கை மீதும் விதிக்கப்பட்ட வரி
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் உலகநாடுகளுக்கு பல்வேறு வரிகளை விதித்து வருகிறார்.இவ்வாறு அவர் விதித்த வரிகளில் இலங்கையும் சிக்கியுள்ளது. இதன்படி இலங்கைக்கு 44 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரி இலங்கையை படுமோசமாக பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மோசமான பாதிப்பை எதிர்கொள்ளப்போகும் ஆடைத்தொழிற்சாலை
குறிப்பாக இந்த வரி விதிப்பால் இலங்கையின் ஆடைத்தொழிற்சாலை படு மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் எனவும் பலர் வேலை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி அநுர, அமெரிக்க ஜனாதிபதிக்கு வரி விதிப்பு தொடர்பில் மறு பரிசீலனை செய்யும் வகையில் கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
