அதிபர் தேர்தல் விவகாரம்! சஜித் களமிறக்கப்பட்டால் தீர்க்கமான அரசியல் முடிவை எடுப்பேன் என்கிறார் சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதிபர்த் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே வேட்பாளரை பெயரிட்டிருக்க வேண்டும். அதுவும் மக்கள் மன நிலையை அறிந்து, வெற்றி பெறக்கூடிய வேட்பாளரையே களமிறக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தவறான முடிவு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றி பெறக்கூடிய வேட்பாளரையே ஐக்கிய மக்கள் சக்தி களமிறக்க வேண்டும். வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்த கட்சியின் முடிவு தவறாகும்.
ஒரு வருடத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால் மக்களின் மனநிலை மாறக்கூடும். தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் சஜித்தான் வெற்றி வேட்பாளர் எனில் அவர் நிச்சயம் களமிறங்க வேண்டும்.
அப்போது நாமும் அவருக்கு ஆதரவாகச் செயற்படுவோம்.
மக்கள் ஆதரவு இல்லாத சூழ்நிலையிலும் சஜித் களமிறக்கப்பட்டால், நான் ஒதுங்கி நிற்பேன். தீர்க்கமான அரசியல் முடிவை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
