பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இரத்து : அரச தரப்பு அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டுமாத காலத்துக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுரேஸ் சலே கைது
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அநாதைகளாக இருந்தவர்கள் தற்போது சுரேஸ் சலேவின் விவகாரத்தை கையில் எடுத்து அவருக்கு சார்பாக பேசுகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்த விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களுக்கு அமைவாகவே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டார்.

சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இடைநிறுத்துமாறு ஒருதரப்பினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டால் விசாரணைகளை நிறுத்த முடியுமா, அவ்வாறு இடம்பெற்றால் சட்டத்தின் மீது நாட்டு மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்.
சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகை வழங்கப்படமாட்டாது. சுரேஸ் சலேவுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு போலியான விடயங்களை குறிப்பிடாமல் நீதிமன்றத்தை நாடலாம். தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கலாம். நீதியை பெற்றுக்கொள்ளலாம்.இதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.
பிரத்தியேக சட்டமூலம்
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பிரமுகர்கள் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் பயங்கரவாதம் இல்லாவிடினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயற்பாடுகளும், போதைப்பொருள் வர்த்தகமும் இன்றும் உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த உரிய சட்டம் இயற்ற வேண்டும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டுமாத காலத்துக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும்.
பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் பாவனையை அழிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்