அரசாங்கம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல, அந்த விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.
"பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்காது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இதே நிலைதான் உள்ளது. சீனிக்கான வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. பால்மாவுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது. எரிவாயு மீதான வரி இப்போது நீக்கப்பட்டுள்ளது . தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக அரசாங்க வருவாய் மிக வேகமாக குறைந்துள்ளது.
ஆனால் இந்த யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது சீனி, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதோடு பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.