மட்டக்களப்புக்கு நாளை பிரதமர் விஜயம் - விவசாய அமைப்புகள் சிவில் சமூக அமைப்புக்கள் புறக்கணிப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தன நாளைய தினம்(4) மட்டக்களப்புக்கு விஜயமாகவுள்ள நிலையில், பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமரின் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெறள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் விவசாயம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அல்லது கச்சேரி அலுவலக மட்டத்தில் உள்ளவர்களுக்காக இந்தக் கூட்டம் இடம்பெறுகிறதா? இது தொடர்பான விளக்கத்தினை தமக்கு கச்சேரி மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என கமக்கார அமைப்புகள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக உணவு பாதுகாப்பு சம்பந்தமாக பேச வேண்டுமாக இருந்தால் உண்மையிலேயே கமக்கார அமைப்புகளுடன் தான் பேச வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வருகையின் நோக்கம்

பிரதமரின் வருகை என்ன நோக்கத்திற்காக என்பது தெரியாத காரணத்தினால் கமக்கார அமைப்புகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அராஜகங்கள், அத்துமீறிய காணிக் கொள்ளைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்பொருள் எனும் போர்வையில் கண்ட இடமெல்லாம் புத்த பவானுக்கு சிலை வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இது போன்ற விடயங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் பிரதமருடன் பேச வேண்டும். பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற போதிலும் குறித்த அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும், நாளைய தினம் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக கமக்கார அமைப்புகள் மற்றும் பிரதமரை சந்திக்க விரும்புவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக அறிய முடிகின்றது.