அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்களை ஆறுதல்படுத்திய தமிழ் எம்.பிக்கள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேச்சு நடத்தியுள்ளமை தமக்கு சிறிய ஆறுதலை தருவதாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் பேச்சு நடத்தியுள்ளதை வரவேற்பதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஆளும் அரசாங்கத்தின் அரசியல் விருப்பத்திலேயே தங்கியுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் சட்டம் மற்றும் நீதி எனும் காரணப்பெயருக்குள் கட்டுண்டவர்களாக கைதிகள் காணப்படும் நிலையில், அவர்களின் விடுதலையை வென்றெடுக்க வேண்டுமாயின் வேறு எந்த தரப்புடனும் பேசி பயனில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் கைதிகள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும் காத்திரமானது என கூறியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், மக்கள் ஆணையின் சிறப்புரிமைக்கமைய சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை அவர்கள் நேரடியாக சந்தித்து ஆற்ற வேண்டிய கருமங்கள் தொடர்பில் அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் கைதிகளின் விடுதலைக்கான பொதுப்பொறிமுறை ஒன்றை முன்வைத்து அரசியல்வாதிகளால் பேச்சு நடத்த முடியும் எனவும் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் கட்சிகளில் பட்டறிவு மிகுந்த பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருக்கும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வை பெற முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக யுத்த முடிவு, நீண்ட கால சிறைவைப்பு, குடும்பங்களின் நிலைமை மற்றும் தற்போதைய கொவிட் தொற்று போன்ற முதன்மைக் காரணிகளை அடிப்படையாக கொண்டு நடைமுறைக்குச் சாத்தியமான விடுதலை பொறிமுறையை அடையாளம் கண்டு அதனை அரசாங்கத்திடம் முன்னிலைப்படுத்தி தீர்வைக் கோருவதன் ஊடாக விடயத்தை இலகு படுத்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனிதாபிமான செயற்கருமத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற மற்றும் ஆதரவளிக்கின்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கூட்டுப்பொறுப்பை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக அரசியல் கைதிகளின் விடுதலை வாய்ப்பு விரைவுபடுத்தப்படலாம் எனவும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் குறித்த விசேட அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.