“சிறிலங்காவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான குழு” சுமந்திரனின் ஏற்பாட்டில் நடந்தது என்ன?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரகசியமாக நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், எப்போதும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவே செயற்படும் இத்தகைய குழுவின் பேச்சுவார்த்தையானது நாட்டுக்கு நன்மை பயப்பதாக ஒரு போதும் அமையாது என தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை அதைரியப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் பற்றியும் அதனை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார்.
இன்று நீங்கள் கூறுவதை ஏன் உங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பதே எமது கேள்வியாகும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. 2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சிறந்த பொருளாதார பின்னணியை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்திருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரே வருடத்தில் இரண்டு முறை மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்று நாட்டின் முழுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது.
ஆனால், எமது அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.
