சரத்வீரசேகரவிற்கு எதிராக நடவடிக்கை -பொங்கி எழுந்த சுமந்திரன்
முல்லைத்தீவு நீதிபதி மற்றும் அவரது மனைவி தொடர்பாக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட சரத்வீரசேகரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவருடைய தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும்

எவருடைய தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சபையில் கருத்து வெளியிட முடியாது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்ததுடன் நீதிபதியின் மனைவி தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தெரிவிப்பது நிலையியற் கட்டளை 83 ஐ மீறும் செயற்பாடாகும். சரத்வீரசேகர இவ்வாறு கருத்து வெளியிடுவது இரண்டாவது தடவையாகும்.
ஏற்கனவே, அவர் சட்டத்தரணிகள் சங்கத்தையும் என்னையும் கடுமையாக விமர்சித்திருந்தார். நான் நாடாளுமன்றில் எந்தவொரு நீதிபதியையும் பெயர்குறிப்பிட்டு கருத்து வெளியிடவில்லை.
பாரதூரமான விடயமாகும்

நீதிபதிகளின் கருத்துக்கள் தொடர்பாக விமர்சிக்கலாமே ஒழிய, நீதிபதியின் தனிப்பட்ட விடயம் தொடர்பாக பேச முடியாது.
ஒரு தமிழ் நீதிபதி எப்படி தன்னை விமர்சிக்க முடியும் எனும் தொனியில்தான் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இது பாரதூரமான விடயமாகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு உரிய வகையில் அவர் நேற்று நடந்து கொள்ளவில்லை.
எனவே, சபாநாயகர் இவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.