மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீட்டின் அடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்துப் பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கோருவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
தேசிய அமைப்பு இயக்குநரகம் (NSO) 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையை எதிர்வுகூறியுள்ள போதிலும், நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் திறைசேரி ஏற்கனவே 15 பில்லியன் ரூபாயை மானியமாக வழங்க உறுதியளித்துள்ளது.
மேலதிக செலவுகள்
இதன் விளைவாக, 95 சதவீதமான வீட்டுப் பாவனையாளர்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கட்டண உயர்வு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதத்திற்கு 180 அலகுகளுக்கும் (Units) குறைவாகப் பயன்படுத்தும் அரச நிறுவனங்கள், பொதுக் கட்டமைப்புக்கள், சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் முதலாம் நிலை தொழிற்சாலைகளுக்கும் இந்த கட்டண அதிகரிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிலக்கரி விநியோகச் சிக்கல்களால் ஏற்படும் மேலதிக செலவுகள் நுகர்வோர் மீது சுமத்தப்படமாட்டாது என ஆணைக்குழு உறுதி அளித்துள்ளது.
இறுதி முடிவு
இது தொடர்பான எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பொதுமக்கள் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் அல்லது ஃபேக்ஸ் மூலம் சமர்ப்பிக்க முடியும்.

அன்றைய தினமே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வாய்மொழி மூலமான கருத்துக்கணிப்பு அமர்வும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்ற விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களைப் பரிசீலித்த பின்னர், மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவை மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |