தமிழர் பகுதியில் உத்தரவை மீறி கட்டப்படும் மற்றொரு விகாரை: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்
திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள்
இருப்பினும், கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் திருகோணமலை மக்களால் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
