மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்
மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள் குடிசார் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள மரணித்த ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபிக்கு முன்னால் இன்று மாலை 6 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“இன்றைய தினம் கள விஜயம் மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் கடும் தொனியில் அச்சுறுத்தப்பட்டு, அவர்களது வீடியோ கமராக்கள், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அதிகாரத்தை அந்த மத குருவுக்கு யார் கொடுத்தது?
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஊடக அடக்குமுறை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
மக்களின் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வது ஊடகங்களதும் ஊடகவியலாளர்களுக்கும் கடமை.
அந்தக் கடமை நிறைவேற்றச் சென்ற ஊடகவியலாளர்கள் இன்று அச்சுறுத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
உண்மையிலேயே இந்த நாட்டில் ஊடக ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்ற அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஊடகங்களின் பாதுகாப்பை இந்த அரசாங்கமும் அதிபரும் உறுதி செய்ய வேண்டும்” - என்றனர்.