மட்டக்களப்பில் பேரினவாத சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பேரினவாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் ஊடகவியலாளர்கள், சர்வ மதத் தலைவர்கள், குடிசார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பேரினவாதிகளால் தடுத்து வைத்தமையை வன்மையாக கண்டித்து குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 11 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத் தலைவி அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
எல்லை கிராம ஆக்கிரமிப்பு

ஆர்ப்பாட்ட காரர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பின் எல்லை கிராமங்கள் அரசாங்கத்தின் துணையுடன் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இதனால் பண்ணை தொழிலாழிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்றைய தினம்(22) மாதவனை மயிலத்தமடு பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பண்ணையாளர்களின் அழைப்பின் பெயரில் மயிலத்தமடுவிற்கு சென்ற ஊடகவியலாளர்கள், சர்வ மதத் தலைவர்கள், குடிசார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளிலிருந்து ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி வெளிவரக்கூடாது எனக் கூறி வெற்றுத்தாளில் கையெழுத்து பெற்றமை ஊடகத் துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும்.
இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் உட்பட சமூக செயற்பாடுகள் தற்போது இனவாதம் கொண்ட காவி உடைகரித்த பிக்குகளினாலும் காடையர்களாலும் புதிதாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, எமது பெரும் மதிப்புக்குரிய சைவ, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் அச்சுறுத்தியமை மிகவும் வருத்தத்தக்கது.
எனவே, சர்வதேசம் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் சர்வதேச நீதி பொறிமுறைக்குள் இலங்கையை உட்படுத்தி சர்வதேச நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிறுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.