தையிட்டியில் முளைத்துள்ள சட்டவிரோத கட்டடம் : மீண்டும் வெடித்த போராட்டம்
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.
சட்ட விரோத கட்டடம் அமைந்துள்ள பகுதியில் இன்று (23) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்களால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கட்டட திறப்பு விழா
இந்த நிலையில் குறித்த பகுதியில் அநுர அரசாங்கத்தின் அனுமதியோடு மீண்டும் ஒரு சட்டவிரோத கட்டடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடாத்தப்படுகிறது.
அனுமதியின்றி புதிதாக கட்டப்பட்டு இன்றையதினம் திறப்புவிழா செய்யப்படுகின்ற கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran), காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி (Hiniduma Sunil Senevi) அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மற்றைய சட்டவிரோதக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் கையாலாகாத தன்மை
தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் மிக இரகசியமான வகையில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வந்ததாகவும் இராணுவத்தினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு பதில் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்ததுடன் தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோத கட்டடங்கள் எவையும் இல்லை என்று கூறியதாக சுட்டிக்காட்ப்படுகின்றது.
ஆனால், இராணுவத்தால் அமைக்கப்பட்டு வந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டதாகவும் குறித்த கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் தொடர்ச்சியாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்