பெண் மருத்துவர் வன்புணர்வு : அனுராதபுரம் வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்
அனுராதபுரம் (anuradhapura)போதனா வைத்தியசாலையில் திருமணமாகாத பெண் மருத்துவர் மீது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் இன்று (12) அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி அவர்கள் பங்கேற்றனர்.
மருத்துவர்கள்,தாதியர்கள் உட்பட பலர் பங்கேற்பு
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள், பிற ஊழியர்கள் மற்றும் ரஜரட்ட மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தை கண்டித்தும் குறித்த வைத்தியருக்கு நீதி கோரியும் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (12) கறுப்பு பட்டி அணிந்தும், பதாதைகளை ஏந்தியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “பெண் வைத்திய உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்”, “சகல பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் உரிமையை பாதுகாப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படும் சிறிலங்கா இராணுவத்திலிருந்து(sri lanka army) தப்பியோடிய நபர் இன்று (12.03.2025) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 6 மணி நேரம் முன்