யாழ். செம்மணியில் ஐந்தாவது நாளாகவும் தொடரும் போராட்டம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.
யாழ்.செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய குறித்த போராட்டம் எதிர்வரும் 01ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பொது அமைப்புகள், முஸ்லிம் மக்கள் சிலர் என பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்கள்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்திய பின்னர் போராட்டம் ஆரம்பமானது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், ”சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்”, ”தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
