படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம்!
கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மறுநாள் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் ஒன்று நடைபெற்றது.
மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (29) காலை மேற்கொண்டிருந்தன
1வருடம் கடந்தும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், காவல்துறையினரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மல்லாவி காவல் நிலையம்
மல்லாவி மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி நடை பவனியாக மல்லாவி காவல் நிலையம் வரை சென்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி , "சஜீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்" "கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து" "விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா" "எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்" "வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா" "எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் " போன்ற எதிர்ப்பு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதேவேளை குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
மகஜர் கையளிப்பு
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி, மல்லாவி காவல் நிலைய பொறுப்பதிகாரி விடுப்பில் சென்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் குறித்த வழக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதுடன், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும், காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரனால் (Thurairasa Ravikaran) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பில் கேட்டு நடவடிக்கைக்கு கடிந்துரைப்பதாகவும் ரவிகரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









