யாழில் காணி விடுவிப்பு கோரி வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
யாழ்ப்பாணம் - வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (15) யாழ் அரச அதிபர் அலுவலக முன்றலில் குறித்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கருத்து வெளியிட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு, கடந்த 15.06.1990 எமது ஊரில் இருந்து நாம் விரட்டப்பட்டு 36 வருடங்கள் 15.06.2026இல் நிறைவடைந்து 37வது வருடத்தில் கால் பதிக்கின்றோம்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2009இல் யுத்தம் நிறைவுற்று 17 வருடங்கள் நிறைவுபட்டுவிட்டது. ஆனால் நாம் குறிப்பாக J/248, 1/255 முழுமையாகவும் J/251, J/246ல் (3/2) பகுதியளவிலும் விடுவிக்கப்படவில்லை.

அதனால், பல போராட்டங்கள் சந்திப்புக்கள் நடாத்தியும் எமக்கு பலன் கிடைக்கவில்லை. தற்போதும் அகதிகளாகவே வாழ்கின்றோம். 24.04.2026ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அறவழியில் தொடர்ந்து போராடி வருகின்றோம்.
இந்தநிலையில் நாம் எதிர்வரும் 15.06.2026 ஆம் திகதி மாபெரும் அறவழிப் போராட்டம் ஒன்றை யாழ் அரச அதிபர் முன்றலில் போராட உத்தேசித்துள்ளோம். உங்களால் முடிந்த உதவியை செய்து இப் போராட்டத்திற்கு பலம் சேருங்கள்” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |