தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள எல்லே குணவங்ச தேரர்!!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதிமிக்க காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தேசிய நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக தம்முடன் இணைந்துகொள்ளும்படி எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பை விடுத்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பினை விடுத்தார்.
இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகளுக்கு எமது நாட்டிற்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு சந்தர்ப்பமும் உருவாகும். மேற்குலக நாடுகளும், சக்திகளும் ஸ்ரீலங்காவிலுள்ள எரிபொருள் வளங்களை கொள்ளையிடக் கங்கணம் கட்டித்திரிகின்றன.
பொஸ்பெயிட் உள்நாட்டு உர உற்பத்தியாலையை வைத்துக்கொண்டு உள்நாட்டில் உரப்பற்றாக்குறையை சொல்கின்றனர். இதனையிட்டுக் கவலையடைகிறேன். இப்போதாவது இந்த நாட்டை எமது கைகளுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாட்டை ஒப்படைத்து, அழிவுகளே இன்றுவரை எஞ்சியிருக்கின்றன.
அவற்றை தொடர இடமளிக்கக்கூடாது. சுமார் 20 அரச நிறுவனங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப் போகின்றார்கள். அதனால் தமிழ் மக்களும் எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன். அண்மையில்கூட தமிழ் மக்கள் சிலர் என்னை சந்தித்ததோடு ஸ்ரீலங்காவில் உள்ள மலே பிரஜைகளும் என்னை சந்தித்திருக்கின்றனர்.
முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைய வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளுக்கு அப்பாற்சென்று மூன்றாவது தரப்பு சக்தியொன்றை உருவாக்கி அதனூடாக விடுதலைப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். ஸ்ரீலங்கா அரசாங்கம் தற்போது செயற்படும் விதத்தை நான் அனுமதிக்கமாட்டேன் என மேலும் தெரிவித்தார்.