முடிந்தால் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும் - சுமந்திரனிடம் சவால்
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்த எம்.ஏ.சுமந்திரன், முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும், உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் (HMM Harris) தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சமகால அரசியல் தொடர்பில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் அவர் குறிப்பிட்டதாவது,
“தற்போது தமிழ் பேசும் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல், அது தொடர்பில் கையாளப்படும் ஆவணங்கள் கூட எமக்கு காண்பிக்கப்படவில்லை.
இவ்வாறு தான் 1987 ஆண்டு கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லிம் தரப்பிற்கு சரியாக காட்டப்படாது அவ்வொப்பந்தம் செய்யப்பட்டது.
13ஆவது சீர்திருத்தச் சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லிம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும்.
தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட பார்வைக்காக வழங்கப்படவில்லை. இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே இது தொடர்பாக வீண் சந்தேகங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் .இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தான் தயங்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.