இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!
நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்
இதற்கமைய, இன்று முதல் அனைத்து சுகாதார பரிசோதகர்களும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்தினருக்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கை விநியோகத்தை தவிர்க்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிப்பதை இடைநிறுத்துதல் மற்றும் இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் அந்த சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்
இதேவேளை கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8