இலங்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் செயல் - உடன் பரிசீலிக்குமாறு இராதாகிருஷ்ணன் கோரிக்கை
ஜெனிவாவில் மாநாடு நடைபெறுகின்ற தற்போதைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்கும் வகையில் ஜனாதிபதி ஆலோசனைக் குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரைகளை கோரியுள்ள நிலையில், நடைபெற்ற இந்தச் சம்பவம் அரசியல் கைதிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதோடு, அவர்களின் விடயம் தொடர்பாக அரசாங்கம் அரசியல் காய் நகர்த்தலையே செய்கின்றது.
இந்த விடயத்தில் அரசாங்கம் அரசியல் கைதிகளின் கோரிக்கையான, அவர்களை அநுராதபுர சிறைச்சாலைகளிலிருந்து யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக பரீசிலனை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.