ஆகாயத்தைத் தொட்டுள்ள விலைவாசி- மீண்டும் 1972 ஆம் ஆண்டை நோக்கி நகரும் நாடு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மீண்டும் 1972 ஆம் ஆண்டை நோக்கி பின் நகர்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் எண்ணெய்க்கும் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை காரணமாக இலங்கைக்கு உதவும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இன்று இலங்கையில் நான்கவது கொரோனா அலை தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையினுடைய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதனால் அன்றாடம் கூலி தொழில் செய்யும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் மக்களுக்கு முறையாக சென்றடையவில்லை. கடந்த காலத்தில் 5000 ரூபாய் 53 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை 17 இலட்சம் பேருக்கே 2000 ரூபாய் வழங்க நேர்ந்துள்ளது.
அத்தோடு தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த 2000 ரூபாய் முறையாக அவர்களின் கைகளுக்கு கிடைப்பதில்லை. இது தொடர்பாக பல முறைபாடுகளும் கிடைக்கப்பபெற்றுள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த பணத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நாட்டில் பொருட்களின் விலைவாசி ஆகாயத்தை தொடுகின்ற சூழ்நிலையில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாகவும், விலைவாசி அதிகரிப்பு காரணமாகவும் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.