அரசியல் ஸ்திரத்தையும் பொருளாதாரத்தையும் அழித்தது ராஜபக்ச குடும்பமே: எம் எம் மஹ்தி பகிரங்கம்
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பொருளாதார ஸ்திரமின்மைக்கும் வீழ்ச்சிக்கும் ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பமுமே காரணம் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று(25) முள்ளிப் பொத்தானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கும் அரசியல் ஸ்திரமின்மைக்கும் தான் பொறுப்பல்ல என பிரதமரும், என்னால் பொருப்பேற்க முடியாது என அரச தலைவர் தனித் தனியே காரணங்களை கூறி தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
இந்த அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடு, பிழையான திட்டமிடல்கள், ஊழல் மோசடிகள் காரணமாகவே நாடு பாதாளத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்திற்குள் இருக்கின்றவர்களில் அரச தலைவர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என ஒரு தரப்பும் பிரதமர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என இன்னொரு தரப்பும் முயற்சிக்கும் அதேவேளை நாட்டின் இந் நிலமைக்கு காரணமான ஒட்டு மொத்த ராஜபக்ச குடும்பமுமே அரசியலிருந்து துரத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து பொது மக்களும் போராடுகின்றனர் .
எனவே மக்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாடு முழுமையாக பாதிப்படைய முன்னர் மக்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் மதிப்பளித்து அனைவரும் பதவி விலகி புதிய அரசாங்கம் ஒன்றை உண்டாக்குவதற்கு வழிவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.