ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்தமை அப்பட்டமான பொய் -அம்பலப்படுத்தினார் ஐ.நா விசேட அறிக்கையாளர்
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறல் குறித்து ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர் என முன்னைய ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்தது பிழையான விடயம் என்பது நிரூபிக்கப்பட்டது , தற்போதும் அந்த கருத்து பிழை. எனவே பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கையை தீவிரமாக கருதவேண்டும் என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீவ்(Pablo de Greve) தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தென்னாபிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகளுக்கான அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இலங்கையை சரியான திசையில் நகர்த்தும் விடயத்தில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் மேலும் சிறந்த விதத்தில் செயற்படவேண்டும்.
இலங்கையில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை என்பதை தெரிவிப்பதில் கவலையடைகின்றேன் மார்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையின் இராஜதந்திரிகள் உலகின் பல பகுதிகளிற்கு சென்று தமது நாடு சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் செய்வதாக நம்பவைக்க –சமாதானப்படுத்த முயல்கின்றனர் என்ற செய்திகளை பார்க்கின்றோம், சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தங்களிடம் உள்ள குறைந்த வளங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்க முடியும் என தெரிவித்திருப்பதை அறிகின்றோம்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இதனை காணமுடியவில்லை என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு சிலர் தயாராயிருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் முழுமையான நிகழ்ச்சிதிட்டமொன்றை கொண்டிருக்கவில்லை,தற்போது அதன் நிகழ்ச்சி நிரலிற்கும் பொறுப்புக்கூறலிற்கும் இடையில் சிறிய தொடர்புமில்லை என தெரிவிக்க விரும்புகின்றேன்.
இலங்கை நெருக்கடியின் பல்வேறு தருணங்களில் ஐநா தலைமையகத்தின் மௌனம் விளங்கப்படுத்த முடியாததாக காணப்பட்டதுடன் எந்த விதத்திலும் பயனுடையதாக காணப்படவில்லை.
அமைப்பு முறை என்பது ஒரு சமூகத்தை மையமாக கொண்டதாக காணப்படும்போது நீதி மற்றும் பாதுகாப்பினை பெறுவது சாத்தியமில்லை என்பதை பெரும்பான்மை சமூகம் விளங்கிக்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
