கொழும்பில் முதல் வீடு வாங்கிய மகிந்த ராஜபக்ச: உதயங்க வீரதுங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) மிரிஹான கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான (Russia) முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச 1980 ஆம் ஆண்டு வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு விஜேராம மாவத்தை, எண் 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மகிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள் செப்டம்பர் பத்தாம் திகதி ஆகும்.
அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான்.
வசதிப் பிரச்சினை
உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன்.
1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மகிந்த நினைவு கூர்ந்தார்.
அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய மகிந்த இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
